Tuesday 6 March 2018

இருளும் அழகும்

இருளும் அழகும் 

விண்மீன்கள் விழி திறக்கும் நேரம் 
வான் எங்கும் மயில் இறகாய் கண்கள் 
நட்சத்திரங்கள் கண் சிமிட்டும் அழகில் 
விடிய விடிய வான் பாடும் காதல் கீதம் 

இருள் வரைந்த அழகிய கோலம் நிலவு 
நிலவின் அழகிற்கு நிறங்களும் அடிமையாகும் 
வான் நிலா உலா வரும் நேரம் 
காதலும் கவிதைகளும் கருப்  பெறும் மண்ணில்

நிசப்தமான இரவுகளில் நிம்மதி வந்தணைக்கும் 
அமைதியான இரவில் இதயம் ஆயிரம் கதை பேசும்  
சத்தம் இன்றிய இரவில் இதய சஞ்சலம் குறையும் 
அமைதி தரும் இரவில் அனைவருமே மௌன விரதம்

இருள் தரும் குளிர் காற்று இன்ப வரம் 
உடல் தழுவும் காற்று உயிரை முத்தமிடும் 
இருள் நேரக்  காற்றில் இதயங்கள் இளைப்பாறும் 
சுவாசம் சுகமாகவும் இருள் சுபமாகும்

இருளின் அழகை தரிசித்த கண்கள்
இனி வந்தணைக்கும் நித்திரை சொர்க்கம்
இருள் தந்த இன்பக்   கொடை உறக்கம் 
இனி இருளில் கனவுகளின் ராச்சியம் ஆரம்பம் 

By Prasanth Satkunanathan ( Heart Beat)

No comments:

Post a Comment